இடம் : சங்க திண்ணை
நேரம் : அந்தி சாயந்த பொழுது
தேவ், இளா, சிபி மூவரும் பதுங்கி பதுங்கி கைப்புள்ளக்கிட்ட வருகின்றார்கள்.
என்னா, எல்லா பயலும் இப்படி பம்மிக்கிட்டு வரீங்க, என்னா மேட்டரு.
மணியாச்சு, வீட்டுக்கு போகனும் இது இளா
ஆரம்பிச்சாட்டான்யா, பொழுது சாய கூடாதே, 16 வயதினிலே கமல் மாதிரி மணியாச்சு வீட்டுக்கு போகனும், பொண்டாட்டி வையும் ஆரம்பித்து விடுவீங்களே…….. சரி என்னத்த பண்ணுறது உங்க தலைவிதி அப்படி…. சரி போயிட்டு காலையில சீக்கிரம் வந்து சேருங்……. அட அதுக்குள்ள மறைஞ்சுட்டானுங்களே……….. ஹும் பொண்டாட்டினா அம்புட்டு பயம் நம்ம பய புள்ளகளுக்கு……
யப்பா பாண்டி, வயிற்ற லேசா இல்ல இல்ல நல்லாவே பசிக்குது, கேரியர கொண்டா, இன்னிக்கு என்ன மெனு
ஆமாம் சரவணபவன்ல இருந்து நமக்கு கேரியர் வருது பாருங்க, என்ன மெனு னு ஒரு கேள்வி வேற – இது சிவா
நம்ம தலைவலி கீதாக்கா வழக்கம் போல தயிர் சாதமும் மாவடும் தான் அனுப்பி இருக்காங்க – பாண்டி ஒரு சலிப்புடன் சொல்ல
அந்த அம்மா தாயுள்ளத்துடன் நமக்கு வக்கனையா சமைச்சு அனுப்புவாங்கனு பாத்தா அதே தயிர் சாதம் தானா, சரி அதோட அந்த நெத்திலி கருவாட கொஞ்சம் எடுத்து வை அப்ப தான் அந்த தயிர் சாதம் உள்ள போகும்.
சிவா கருவாட்டுடன் வர பாண்டி, கைப்புள்ள, சிவா மூவரும் அந்த தயிர் சாதத்தையும் விடாமல் ஒரு வெட்டு வெட்டி முடிகின்றார்கள்.
ஆமாம் எங்க இந்த வெட்டிப்பயலயும், ராமையும் காணாம் என கைப்பு கேட்க
சாப்பிடுற வரைக்கு கேட்கல, எல்லாத்தையும் காலி பண்ணிட்டு கேட்பதை பாரு என்று முனவி கொண்டே, வெட்டி அவன் பிரிவுல ரொம்ப நல்லா ஆணி புடுங்குறதால அவன இனிமே கடப்பாரை புடுங்குற பிரிவுக்கு மாத்திட்டாங்க, அதான் கடப்பாரை புடுங்க பயற்சி எடுக்க போய் இருக்கான்.
அவன களப்பணி பாருடா என்றால் கடப்பாரை புடுங்குற பணியா பார்த்துக் கிட்டு இருக்கான், அவன அப்பால தனியா டீல் பண்ணுறேன், இந்த ராயல் பயலுக்கு என்னாச்சு?
நம்ம ஜாவா புலவர இந்த மாசம் நம்ம சார்பா அடி வாங்குறது கூட்டிக்கிட்டு வந்தோம்ல, அவரு வந்த உடனே ஒடி போயிட்டாப்புல, அதான் அவர தேத்தி ஒட்டிட்டு வர போயி இருக்கான்.
ஒ, அதானா. நாம எல்லாம் பொழுதன்னைக்கு அடி வாங்கிட்டு இருக்கோம், எதாச்சும் அசந்து இருக்கோமா என்ன? என்று சொல்லி கொண்டே கைப்பு உடம்பை ஒரு மாதிரியாக வளைத்து ஏலேய் பாண்டி அந்த கட்டிலை எடுத்து அப்படி வெளியில் போடுடா, உடம்பு ஒரு மாதிரி நோகா இருக்கு………
ஆரம்பிச்சாட்டான்யா, இன்னிக்கும் நம்மள கை, காலு அமுக்க சொல்ல, இத தெரிஞ்சு தான் வெட்டி பய சாயங்காலம் ஆனா எதையாச்சும் சொல்லிட்டு ஒடி விடுகின்றான் போல என முனவி கொண்டே பாண்டி கட்டிலை கொண்டு வந்து போடுகின்றார்.
கட்டிலில் கைப்பு படுத்துக் கொள்ள சிவாவும், பாண்டியும் ஆளுக்கு ஒரு புறம் அமர்ந்து கைப்பூவின் கை கால்களை அமுக்குகின்றார்கள்.
ஏன் தல, சூரியன் சாய்ந்தா போதும் இந்த இளா, சிபி, தேவ் இந்த மூனு பெயரும் ஒடி விடுகின்றார்களே., நீ ஒன்னும் தெரியாத அப்பிராணிகளான என்ன, சிவா, வெட்டிபய, ராயல் னு போட்டு படுத்தி எடுக்குற. இது நியாயமா………
அடே பாண்டி, அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆச்சுடா, நம்மள மாதிரி வெட்டி பசங்களா அவங்க, அவங்களுக்கு குடும்பம் ஒன்னு இருக்குல, அதான் சாயங்காலம் ஆனா உடனே போயிடுறாங்க கைப்பு சமாதானம் படுத்த முயல்கின்றார்.
அப்ப நமக்கும் அது போல குடும்பம்(!!!) எல்லாம் எப்ப வரும் பாண்டி ஆர்வப்பட…
பாண்டி வேணாம், நீ ஏதுக்கோ அடி போடுற, அந்த மேட்டர இப்ப ஆரம்பிக்காத, எனக்கு தூக்கம் வருது. ஒரு நல்ல பாட்டா பாடு என கைப்பு சொல்கிறார்.
என்ன பாட்டு பாட என பாண்டி விழிக்க
அம்மா பாட்டு தான் என கைப்பு சிம்ம குரல் எழுப்ப முயல
சிவா இடையில் புகுந்து வேணாம் அவரு மாதிரி வாய்ஸ் குடுக்க முயற்சி பண்ணி அவர அசிங்கப்படுத்தாத விட்டுடூ… ஏலேய் பாண்டி எதாச்சும் ஒரு பாட்ட பாடி தொல…….
“ராத்திரி நேரத்து பூங்குயில்” என பாண்டி ஆரம்பிக்க
கைப்பு அலறிக்கிட்டே ஏய் இந்த பாட்டு எதுக்குடா இப்ப பாடுற, இது வேணாம் வேற எதாச்சும் ஒரு பாட்ட பாடு என சொல்ல
“நேத்து ராத்திரி” என மறுபடியும் பாண்டி தொடங்க
நிறுத்து…..நீ பாட்டே பாட வேண்டாம், நீ பாட ஆரம்பிச்சா வில்லங்கம் ஆயிடும் போல இருக்கு, யப்பா சிவா நீ எதாச்சும் ஒரு நல்ல தாலாட்டு பாட்டா பாடு. இந்த பாண்டி பய என்ன இன்னிக்கு அழு வைப்பதிலே குறியா இருக்கான் என கைப்பு சொல்கின்றார்.
அக்கஹ அக்கஹ என சிவா இறுமி காட்டி பாட ஆயுத்தமாக
பாண்டி இந்த சத்தத்தை கேட்டு ஒரு வித பயத்துடன் ஏய் சிவா இப்ப என்ன பண்ணுன, இதுக்கு அப்புறம் என்ன பண்ண போற என ஒரு மிரட்சியுடன் கேட்க
அடேய் பாண்டி அவன் எட்டு கட்டையில் பாடுவதற்கு ஒரு சவுண்ட் உட்டு பாத்தான், அம்புட்டு தான் நீ பயப்படாத, இல்ல எதுக்கும் நீ என் கையை கொஞ்சம் சேர்த்தே புடிச்சுக்கோ என பாண்டியிடம் சொல்லிவிட்டு யப்பா சிவா உனக்கு எட்டாம் நம்பர் ஒத்து வராது அதுனால ஏழு கட்டையிலே பாடு
ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ – என சிவா ஆரம்பிக்க
ஏய் நிறுத்து நிறுத்து உன்ன பாட்டு பாட சொன்னா என்ன நீ தாலாட்டு பாட ஆரம்பிச்சுட்ட என பாண்டி மறுபடியும் ஆரம்பிக்க
பாண்டி தல என்ன சொன்னார் என்னபதை நீ கொஞ்சம் ரிவைண்ட் பண்ணி யோசிச்சிக்கிட்டு இரு. நான் பாடி முடிக்கும் வரை வாய திறக்காதே என்ன? என்று பாண்டியை அடக்கி விட்டு சிவா மறுபடியும் பாட்டை ஆரம்பிக்கின்றார்.
ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ
கண்ணே நீ உறங்கு
ஆரிரோ ஆராரோ
காணே மயில் உறங்கு
ஆரிரோ ஆராரோ
பசும் பொண்ணே……… நீ உறங்கு
பூவரசு வந்து உறங்கு
யாரடிச்சு நீ அழுத
அடிச்சார சொல்லி அழு
மாமன் அடிச்சானோ
மல்லிக்கை பூ செண்டாலே
அத்தை அடிச்சாலோ
அரளி பூ செண்டாலே
அடிச்சாரை சொல்லி அழு
ஆக்கினைகள் செஞ்சு வைப்போம்
ஏய் ஏய், நிறுத்து நிறுத்து என பாண்டி மறுபடியும் ஆரம்பிக்க
இப்ப என்ன என்கிற மாதிரி சிவா பார்க்க
நீ பாடுன பாட்டில் குற்றம் இருக்கு என பாண்டி இழுக்க
பாண்டி என்ன பாடி முடிக்க விடு, அப்புறம் நீயே சந்தோஷப்படுவ, நடுவில் தொந்திரவு பண்ணாத என்ன….
அது எல்லாம் இல்ல, எனக்கு பதில் சொல்லிட்டு நீ மிச்சத்தை கண்டினியூ பண்ணு என பாண்டி வம்படி பண்ண
சரி கேட்டு தொல என சிவா அழுத்துக்கொள்ள, நம்ம தல “யாருக்கு கிட்ட அடி வாங்கவில்லை” என்று பாடு அதில் ஒரு அர்த்தம் இருக்கு அத விட்டு விட்டு “யாரு அடிச்சா சொல்லி அழுனு” சொன்னா என்ன அர்த்தம்னு கேட்குகிறேன் என பாண்டி பெருமித பார்வை பாக்க………
பாண்டி, உன்ன கொன்னுடுவேன் சொல்லிட்டேன், நம்ம சிவா பய எம்புட்டு பீல் பண்ணி நான் தூங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தாலாட்ட பாடிக்கிட்டு இருக்கான், நீ என்னடான உடால உடால கேள்வி கேட்டு அவனை டிஸ்டர்ப் பண்ணுற, மவனே நான் சொல்லுற வரைக்கும் நீ வாயை திறக்க கூடாது சொல்லிட்டேன் என கைப்பு பாண்டியை கண்டித்து விட்டு, சிவா நீ கண்டினியூ பண்ணுடா செல்லம் என சொல்ல
சிவா நமட்டு சிரிப்புடன் தலையசைத்து கொண்டே ஒகே தல என சொல்லிவிட்டு
யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் சீண்டவில்லை
தானே அழுகுறாண்டி
தனக்கு ஒரு துணை வேண்டுமுனு – என முடிக்க
கைப்பு பதறி அடித்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து கோபப் பார்வையுடன் சிவாவை பார்த்து
நீ ஒருத்தன் தான் சங்கத்தில உருப்படியா இருக்கனு நினைச்சேன் நீயுமா… சரி நடத்துங்கடா என்ன அடி வாங்க வைக்க என்ன எல்லாம் பண்ணனுமோ அம்புட்டையும் பண்ணுறீங்க நீங்க……… டேய் பாண்டி இவனுக்கு இது மாதிரி பாட சொன்னது நீ தானா என கேட்க
பாண்டி தலை மேலும் கீழும் ஆட்டி விட்டு பின் இடதும் வலதுமாக ஆட்டுகின்றார்.
ஏய் பாண்டி எதாச்சும் ஒரு பக்கம் ஆட்டு, இப்படி இரண்டு பக்கமும் ஆட்டுனா என்ன அர்த்தம், ஏன் நீ வாய திறந்து பதில் சொல்ல மாட்டிங்களோ…
நீங்க தான் தல நான் சொல்லாம வாயை திறக்க கூடாதுனு சொன்னீங்க என பாண்டி குழந்தைத்தனமாக சொல்ல
கிளம்பிட்டானுய்யா கிளம்பிட்டானுங்க………………