வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘சுரேஷ் (penathal Suresh)’ பகுப்புக்கான தொகுப்பு

நன்றி (01அக்டோபர் 2006)

பதிந்தவர் vavaasangam மேல் அக்டோபர் 1, 2006

செப்டம்பர் மாதம் என்னை அட்லாஸ் வாலிபனாக்கி அழகு பார்த்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினருக்கு நன்றி.

அக்டோபர் மாத ஆப்பை வாங்க வரும் டுபுக்காருக்கு வாழ்த்து!

நகைச்சுவை எழுத முனைந்து உட்காரும்போது வருவதில்லை என்பதை இந்த மாத பதிவு ஆயத்தங்களில் உணர்ந்தேன்; நீங்களும் உணர்ந்தீர்களா?

.... இங்கே பதியப்பட்டது சுரேஷ் (penathal Suresh) | 8 மறுமொழிகள் »

சிவாஜி-ஒரு திரை முன்னோட்டம்

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 28, 2006

ஜனங்களே,

இணைய ரசிகர்களுக்கென்றே நான் உருவாக்கிய திரை முன்னோட்டம், இதோ உங்கள் பார்வைக்காக.

சிவாஜி திரைப்படம், பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பெரும் தலைகள் சேரும்போது, அவர்களின் பழைய படங்கள் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுவதும், வரும் படம் .. அ) பழைய படங்கள் போலவே இருப்பதால் ஏமாற்றுவதும் அல்லது ஆ) புதுமையாக இருந்து ஏமாற்றுவதும் சகஜம்:-)

சிவாஜியில் நான் என்ன எதிர்பார்க்கிறேன்? ஒன்றுமே இல்லை! ரஜினியின் பழைய படங்களின், சங்கரின் பிரம்மாண்டத்தின் உல்டா எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை இங்கே..

பாகம் 1:

பாகம் 2:

பி கு:

1. கோப்பின் அளவு பெரியதானதால் இரு கோப்புகள், மன்னிக்க.

2. என் ஒலிப்பதிவுக்கருவியைச் சரி செய்ய இன்னும் நேரம் வாய்க்கவில்லை, ஒலிக்குறைபாட்டுக்கு மன்னிக்க. வசனத்தை இங்கே காணலாம்.

3. மீள்பதிவுக்குக் காரணங்கள்:

அ. வரலாறு காணாத வேலைத் தொல்லை:-(

ஆ. இதுவும் எனக்குப்பிடித்த என் நல்ல நகைச்சுவை முயற்சிகளில் ஒன்று, புதியவர்கள் பார்க்கலாமே.

இ. பழைய image hoster மூன்று மாதங்களுக்குப் பின் ஸ்வாஹா செய்துவிட்டது. இது இன்னும் கொஞ்ச நாள் தாங்கும்.

4. முன்பெல்லாம் SWF வலையேற்ற நூற்றுக்கணக்கில் தளங்கள் இருந்தன. இப்போது என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இப்போது போட்டிருப்பது, நம்பமாட்டீர்கள் – 20 ஆவது முறை முயற்சித்து அப்லோட் செய்தது:-((

.... இங்கே பதியப்பட்டது சுரேஷ் (penathal Suresh) | 11 மறுமொழிகள் »

முதுகலை இல்லறத்தியல் – M.Sc Wifeology

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 19, 2006

மனைவிக்கவிதைகள்

காதலியைப்பற்றி எழுத ஆயிரக்கணக்கான கவிஞர்களும் அவர்கள் எழுதிய கோடிக்கணக்கான கவிதைகளும் இருக்கின்றன. “வீட்டுல அதைப் பாடுங்க – பொண்டாட்டிய லவ் பண்ணுங்க”என்ற இளையராஜா நீங்கலாக, மனைவியைப்பற்றி கவிதை மழை பொழிந்த யாரும் என் கண்ணில் படவில்லை.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டிவிட்ட முதுகலை இல்லறத்தியல் பட்டதாரியான நானும் எழுதாவிட்டால் மெல்லத் தமிழினிச் சாகுமோ என்ற பயம் வந்துவிட்டது. மேலும் “மேட்டர் இல்லாதவனுக்கு கவிதையே கைகண்ட மருந்து” என்ற என் கவிமடத் தலைவன் பொன்மொழியும் நினைவில் ஆட, எடுத்துவிட்டேன் கலப்பையை.

கவிப்பேரரசுவின் லிஸ்ட் கவிதைகளையும், பாரதியின் கண்ணன் / கண்ணம்மா சீரீஸ் கவிதைகளையும் என் முன்னோடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறேன்!

மனைவி ஒரு எலக்ட்ரானிக் விந்தை

மனைவி ஒரு டெலிவிஷன்

இன்னும் யாரும் அதற்கு
ரிமோட் கண்டுபிடிக்கவில்லை.

மனைவி ஒரு ரெப்ரிஜரேட்டர்

பழைய சண்டைநினைவுகளையும்
கெடாமல் காப்பவள் -
தேவையான நேரத்தில்
கொடுப்பவள்

மனைவி ஒரு வாட்ச்

காலையில் எழுப்ப,
கண் போகும் பாதையை
கவனிக்க,
எல்லா அர்த்தத்திலேயும்:-(

மனைவி ஒரு குக்கர்

வேலை செய்வதைவிட
செய்ததைக்காட்ட
விசில் அடிப்பதில்தான்
ஆர்வம் அதிகம்!

மனைவி ஒரு வாஷிங் மெஷின்

துவைப்பதில்,
பிழிவதில்
வெளுத்துக்கட்டுவதில்!

மனைவி ஒரு தொழில்நுட்பப்புரட்சி

மனைவி ஒரு செல்போன்

இன்கமிங்கில் வசதிகள்
இருந்தாலும்
அவுட்கோயிங்
எப்போதும் செலவுதான்.

மனைவி ஒரு ரீசார்ஜ் கார்டு..

பழிவாங்குதலை
உடனே செய்யும் பூத் கார்டு;
கொஞ்சநாள் தாங்கும் ப்ரீபெய்டு
சேர்த்து வைத்துத் தாக்கும் போஸ்ட் பெய்டு..
விடாது ஆப்பு!

மனைவி ஒரு கணினி

உதவி போல் உள்ளே வந்து
எல்லா நேரத்தையும்
ஆக்கிரமிக்கும்.
அதன் கீபோர்டில்
கண்ட்ரோல் ஆல்ட் டெலீட்
மட்டும் கிடையாது!

மனைவி ஒரு இ-மெயில்

அட்டாச்மெண்டுகள் அதிகமானால்
வேகம் குறையும்.

மனைவி ஒரு இலக்கியம்

மனைவி ஒரு சிறுகதை

எப்போதுமே
எதிர்பாராத முடிவுதான்.

மனைவி ஒரு நாவல்

முரண்படும்
பல பாத்திரங்களை
முழுதாக உள்ளே கொண்டவள்

மனைவி ஒரு கவிதை

படைத்தவனையும்
சேர்த்து யாருக்கும்
புரியாத கவிதை.

மனைவி ஒரு நாடகம்

காட்சி அமைப்பில்
இன்னும் சிலர் இருப்பினும்
ஓரங்கம் மட்டுமே பேசும்.

இப்போதைக்கு இவ்வளவுதான்.

முக்கியமான பின்குறிப்பு: இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற “வாழ்த்து” வழங்கப்படும்.

முக்கியமோ முக்கியமான பின்குறிப்பு: இப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவியிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்.

.... இங்கே பதியப்பட்டது சுரேஷ் (penathal Suresh) | 78 மறுமொழிகள் »

சர்தார்ஜி – இது நிஜம் அய்யா!

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 11, 2006

என் வாலிப அனுபவங்களுக்குக் கிடைத்த ஏகோபித்த அனுதாபங்களினால் உந்தப்பட்டு, அனுபவச்சிதறல்களையே தொடரலாமே என்ற முடிவுக்கு வந்தேன். (அடங்குடா மவனே என் பதிவுக்கு மட்டும்தான்).

சைட்டடிக்கத்தான் முடியவில்லையே தவிர, வட இந்தியாவில் வேறு எந்த வகையிலும் ஆண்டவன் எனக்குக் குறை வைக்கவில்லை. காமடிக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் என் கூடவே ஒரு சர்தார்ஜி நண்பனை அனுப்பி வைத்தார்.

சர்தார்ஜிகளை ஜோக்குகளில் மட்டுமே சந்தித்த வந்த எனக்கு அந்த ஜோக்குகள் முழுக்கற்பனை அல்ல என்று உணர வைத்தவன் இந்த நண்பன். இவனை ஏமாற்றுவது எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு.

சென்னையிலே பரங்கிமலையில் பிறந்து வளர்ந்தவன் இந்த சர்தார். ஏதோ காரணங்களால் சர்தார்ஜிகளோடு புழங்காமல் ஆங்கிலோ இந்தியர்கள் குடியிருப்புக்கு அருகில் வசித்ததால் சுமாராகத் தமிழும் அரைகுறை ஆங்கிலமும் வைத்து ஒப்பேற்றுவான். இவனுக்கு இந்தி வராது என்று எங்களுக்குத் தெரியாது (நாங்கள் நால்வர், சர்தாரைத் தவிர்த்த மூவரும் அக்மார்க் தமிழர்கள் – தூர்தர்ஷனில் கூட இந்தி பார்க்காதவர்கள்).

உத்தரப்பிரதேசத்தின் ஒரு அழுக்கடைந்த கோல் இந்தியா டவுன்ஷிப்பில் எங்களை இறக்கிவிட்டு பஸ் சென்றுவிட, தங்குமிடத்துக்கு ஆட்டோ வைக்க வேண்டும். இந்திப் புலவன் என்று நாங்கள் நினைத்திருந்த சர்தார் ஆட்டோக்காரனிடம் பேரம் பேசினான்.

“எக்ஸிகியூடிவ் ஹாஸ்டல் ஜானா ஹே!”

“வோ கஹான் ஹே?” என்றான் ஆட்டோக்காரன். நல்லவேளையாக வழி சொன்னவர் இன்னொரு அடையாளத்தையும் சொல்லியிருந்தார்.

“ஜி எம் ஆபீஸுக்கு பகல் மே” இந்த உக்குவை நாங்கள் கவனிக்கவில்லை!

“பச்சீஸ் ருப்யா?”

“மாப்ளே அம்பது ரூபா சொல்றாம்பா”

“நாப்பதுக்குக் கேளு” பேரம் பேசாம ஸ்டாம்பு கூட வாங்க மாட்டோமில்ல!

“சார்லீஸ் டீக் ஹே?”

அதிர்ந்து போன ஆட்டோக்காரன் “டீக் ஹே” என்று நாற்பதுக்குக் கொண்டு விட்டான்.

என் இந்தி அறிவு கொஞ்சம் செழுமையான பிறகுதான் தெரிந்தது ஆட்டோக்காரன் அதிர்ந்ததன் ரகசியம். அவன் முதலில் கேட்டது 25 ரூபாய்!

ஏமாறும்போது அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து நாங்களே மறந்த பின்னர் ஏமாந்ததை பறைசாற்றிக்கொள்ளுவது இவன் ஸ்டைல்!

ஒரு முறை ட்ரெயினில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு அத்துவானத்தில் சிக்னல் கிடைக்காமல் நள்ளிரவில் மூன்று மணிநேரம் நின்றது. ஆட்டத்திலேயே தூங்கிப் பழகிய நான் ஆட்டம் நின்றதால் எழுந்துவிட்டேன். சர்தார் கனவு கலையாமல் உறங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு நண்பனும் எழுந்து, இயற்கைச் சூழ்நிலையில் இயற்கை உபாதை கழிக்க இறங்கினான்,

ஏறும்போது சர்தார் அரைத்தூக்கத்தில் “ஏண்டா வண்டி நிக்குது?” நண்பன் குசும்பு பிடித்தவன். “அதுவா, வழியிலே ரொம்ப முள்ளாம், ரெண்டு மூணு டயர் பஞ்சராம்” இந்த ஜோக் முடிந்துவிட்டது என நினைத்து தூங்கிவிட்டோம்.

மறுநாள் அலுவலகத்தில் பாஸ் ஏன் லேட் என்று கேட்டதற்கு சர்தார்ஜி “வர வழியிலே மூணு டயர் பஞ்சர், அதனாலதான் லேட்” என்று சீரியஸாகச் சொன்னதை இன்றும் அந்த அலுவலகம் மறக்கவில்லை, மறக்கத் தான் முடியுமா?

அரைகுறைத் தமிழில் இவன் அடித்த அட்டகாசங்களை இந்த வருட அட்லாஸ் வாலிபனானாலும் கூட முடிக்க முடியாது.

ஒரு நாள் சீரியஸாகத் தமிழ் பாட்டு ஒன்றைக் கொலை செய்து கொண்டிருந்தான்.

“உல்லுக்குல்ல ஸக்கரவத்தி ஆனா உன்மையிள மெலுகுவத்தி”

“என்ன சர்தார், தமிழ் பாட்டெல்லாம் பாடுற!”

“நல்ல மீனிங்டா இந்த பாட்டு”

“அப்படியா? என்ன மீனிங் சொல்லு பாக்கலாம்!”

“he tells, he is inside sweet matches, but really he is candle matches!”

“ஏறத்தாழ புடிச்சிட்டயே.. அது என்ன Sweet matches?”

“சக்கர ன்னா Sugar தானே? அதான் Sweetனு கண்டுபிடிச்சேன்”

“அடேங்கப்பா! அப்புறம் matches?”

“அதான் வத்தின்னு வருதே.. மாட்ச் பாக்ஸத்தானே வத்திப் பொட்டின்னு சொல்றீங்க?”

அருகிலிருந்த சுவரில் தலையை முட்டிக்கொள்ளப் போனேன்..

“உண்ச்சி வியாசர்பாடி”

“இது என்னடா”

“டென்ஷன் ஆவாதேன்னு தமிழ்லே சொன்னேன்”

‘உணர்ச்சிவசப்படாதே” என்று சொல்ல வந்தானாம்!

வேலையைப் பொறுத்தவரை அவன் புத்திசாலிதான். இருந்தாலும் ஓரிரு முறை அவனையும் மீறி அவனுக்குள் இருக்கும் சர்தார் வெளிப்பட்டுவிடுவான்.

மெஷினில் இருக்கும் ரேடியேட்டர் கேப்புகள் Brassஇனால் ஆனவை என்பதால் அடிக்கடி திருட்டுப்போகும். கேப் போவதால் வேறு சில பிரச்சினைகள் வந்து, அடிக்கடி மெஷின்கள் பழுதாவதால் இந்தத் திருட்டுகள் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. ஒரு நாள் நம் தலைவர் வேலையிலிருந்து திரும்பி வந்து “யூரேகா” என்றான் உற்சாகமாக!

“என்னடா ஆச்சு?”

“இந்த ரேடியேட்டர் கேப் பிரச்சினைக்கு ஒரு பெர்மனண்ட் சொல்யூஷன் கண்டு பிடிச்சிட்டேன். எல்லாக் கேப்பையும் எடுத்து ஸ்டோர்க்குள்ளே வச்சிட்டேன்”

“கேப் இல்லாட்டி தண்ணி சிந்திடுமேடா”

“நான் என்ன கேனையனா? எல்ல வண்டிக்கும் கேப் இருந்த இடத்திலே ஒரு பிளேட் வச்சு வெல்ட் செஞ்சுட்டேன்!”

எல்லா வெல்டிங்கையும் நீக்க ஒரு வாரமானது!

ஒரு நாள் மிகக் கோபமாக இருந்தான்.

“என்னடா? கோபமா இருக்கே?”

“என்னை அந்த ஸ்ரீவாத்ஸவ் முட்டாளுன்னு நெனைக்கிறாண்டா!”

“பரவாயில்லையே, ஸ்ரீவாத்ஸவ் புத்திசாலின்னு புரூவ் பண்ணிட்டானே? என்ன ஆச்சு?”

“நம்ம கேடர்பில்லர் ரெகமண்டேஷன் படி மெஷின் டயர்லே வெறும் காத்து அடிக்கக்கூடாது, நைட்ரஜன் தான் அடிக்கணுமுன்னு அவன்கிட்டே சொன்னேன்.”

“சரிதான். அது ரெகமண்டேஷன் இல்லடா, வெறும் சஜஷன் தான்”

“இருந்துட்டுப் போகட்டுமே, உண்மையச் சொல்லலாமில்ல, வெறும் காத்துதான் அடிக்கறோமின்னு – அவன் என் கிட்டே பொய் சொல்றாண்டா.. இந்த சைட்லே நாங்க எப்பவும் 78% பியூர் நைட்ரஜன் தான் அடிக்கறோம்னு சொல்றான். நானும் இந்த வொர்க் ஷாப் புல்லாத் தேடிப் பாத்துட்டேன், எங்கேயுமே 78% நைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷனே கிடையாது. வெறும் ஏர் கம்பிரஸர்தான் இருக்கு”

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அடக்கிக் கொண்டு, “சும்மா விடாதே அந்த ஸ்ரீவாத்ஸவ்வை! பொய்யா சொல்றான்” என்று ஏற்றிவிட்டேன்.

கொஞ்ச நாள் கழித்து அவனுக்கும் உண்மை தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு ஒரு வாரம் ஸ்ரீவாத்ஸவ்வும் நானும் அவன் கண்ணில் படாமல், வி ஆர் த எஸ்கேப்!

.... இங்கே பதியப்பட்டது சுரேஷ் (penathal Suresh) | 37 மறுமொழிகள் »

அட்லாஸ் – வாலிபன்?

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 5, 2006

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினருக்கு என் வருத்தம் கலந்த வணக்கங்கள்

வருத்தம் ஏன்? வ வா ச வில் சேரத் தகுதியில்லாதவன் என்பதால்! அது ஏன்?

ப ம க அடிப்படை உறுப்பினர் என்பதாலா? நிச்சயமாக இல்லை. ப ம கவுக்கும் வ வா சவுக்கும் கொள்கைகள் கூடாது என்ற பொதுக்கொள்கை இருப்பதால் அதில் எந்தப் பிணக்கும் கிடையாது.

நான் வாலிபனில்லையா? என் வயசெல்லாம் ஒரு வயசா? வாலிபன் தான். இருந்தாலும், வருத்தப்படாதவன் இல்லை!

வருந்தி வருந்தியே வாழ்ந்த வாலிபப்பருவத்துக்குச் சொந்தக்காரன் நான்.

கேளுங்கள் என் கண்ணீர்க்கதையை. படிக்கும் போது அழுதுவிடாதீர்கள். கீபோர்டு தண்ணீர், காபி, இளநீர், பீர் போன்றவற்றோடு, கண்ணீரையும் தாங்காது. அச்சடித்துப் பின் படித்தாலும் எழுத்துகள் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு படியுங்கள்!

ஒவ்வொரு ப்ராஜக்ட் சைட்டிலும் ஏதோ ஒரு ஸ்பானர் சைட்டடிக்க முடியாத சோகத்தை போல்ட்டை டைட்டடிப்பதில் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

வார்த்தைகளுக்குள் அகப்படாத அந்த சோகத்தை வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மெக்கானிக்கல் பொறியாளனின் கதைதான் இது..

இதைப்படிக்கும் கல்நெஞ்சும் கரையும். கொதிக்கும் ரத்தம் உறையும்..

16 வயதினிலே

“எங்கடா கிளம்பிட்டீங்க?”

“டைம் நாலாச்சில்ல, காலேஜ் வுடற நேரம். கொஞ்ச நேரம் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கவேணாமா?”

“நானும் வரேண்டா”

“நீயா? சரியாப்போச்சு போ. மீசை கூட முளைக்கல. நீ கூட இருந்தா எவளும் எங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டாங்க!”

“அப்படிச் சொல்லாதேடா. இவன் வந்தா இரு கோடுகள் தத்துவப்படி நாம அழகாத் தெரிவோமில்லையா?”

“சரி ஒழிஞ்சிபோ. அங்க வந்து தொந்தரவு பண்ணக்கூடாது”

“அதோ வரா பாரு ஸ்வேதா. அவளைத்தான் நானும் அஞ்சு மாசமா ரூட் விட்டுகிட்டு இருக்கேன். ம்ஹூம். வேலைக்கு ஆவாது போல. டைம் கூட கேக்க முடியல இன்னி வரைக்கும்”

“என்னடா இது நேரா இங்கேயே வரா!”

“நீ.. சுரேஷ் தானே.. ____ தம்பி?”

“ஆமா”

“இங்கே என்ன பண்றே? சைக்கிள் இல்லையா? நான் வேணும்னா வீட்டுக்குக் கூட்டிப் போகட்டுமா?”

“….”

“இவங்கள்ளாம் உன் பிரண்ட்ஸா? அப்போ உன் வயசுதான் இருக்கும்.. பசங்களா.. உங்களை டெய்லி இதே இடத்திலே பார்க்கிறேன். படிக்கிற வயசிலே படிங்கப்பா. பாத்தா பெரிய பையனுங்க மாதிரி இருக்கீங்க! பொறுப்பு வரலியே..”

“அப்பா! போயிட்டாடா! உன் பேச்சக் கேட்டு இவனைப்போயி கூட கூட்டிகினு வந்தோமே! ஒரே அடியிலே நம்மளைக் குழந்தைங்களாக்கிட்டுப் போயிட்டா. மொத்துறா இவனை!”

எனக்கு இருபது, யாருக்கு பதினெட்டு?

“என்னடா ஊரு இது. ஒண்ணு 10 வயசுக் குழந்தைங்க இல்லியா, 50 வயசு ஆண்ட்டிங்க! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒண்ணுமே பட மாட்டேங்குதேடா”
“நார்த் இந்தியாவே அப்படித்தான் டா”
“ஆமா, வந்துட்டாருடா அறிவுசீவி! வயசுப்பொண்ணுங்களே கிடையாதாடா நார்த் இந்தியாவுலே”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல! இது டவுன்ஷிப் இல்லையா? இந்த ஊர்லே பத்தாங்கிளாசுக்கு மேலே ஸ்கூலே கிடையாது. வயசுப்பொண்ணுங்க எல்லாம் படிக்கறதுக்கு வேற ஊர் போயிடறாங்க!”
“நமக்கு மட்டும் ஏண்டா இப்படி?”
“கிடக்கட்டும் வா வேலையப் பாப்போம்! ரம்பா குஷ்பூ எல்லாரும் பிரேக்டவுண்”
“அது யாருடா ரம்பா குஷ்பூ?”
“50டன் லாரி ரம்பா.. ஒல்லியா இருக்கில்ல, 85டன்னுக்கு குஷ்பூ பேரை வெச்சு மனசத் தேத்திக்க வேண்டியதுதான்”
“அந்த பழைய காலத்து 35டன் லாரி?”
“அதுவா, கொல்லங்குடி கருப்பாயி!”
வேட்டையாடாதே விளையாடாதே! (25 வயதினிலே)

“சார் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும்”
“என்ன மேட்டர் சொல்லு. அப்புறம் யோசிக்கிறேன்”
“கஷ்டப்பட்டு மெட்ராஸ் ட்ரேன்ஸ்பர் வாங்கியிருக்கேன். இங்கே ஸ்டெல்லா
மேரிஸ், எஸ் ஐ ஈ டின்னு பல காலேஜுங்கள்லாம் இருக்குதாமே, அதையெல்லாம் ஒரு முறை பாத்துட்டு வரலாமுன்னு”
“சைட்டடிக்கப் போறயா?”
“தப்பா சார்?”
“இதுக்கு நான் பர்மிஷன் தர மாட்டேன். இது ஒரு நாள்லே முடியற வேலையில்லே. ஒரு நாள் போயிப் பாத்துட்டேன்னா, டெய்லி போகணுமுன்னு சொல்வே. நான் மாட்டேன்னா வேலைய விட்டுடுவே.”
“அதனாலே?”
“வேலை செய்யற ஒரு ஆளு ரிசைன் பண்றதுக்கு நான் காரணமா இருந்தா அதனாலேயே என்ன டெர்மினேட் பண்ணிடுவாங்க! அதனால..”
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் (30 வயதினிலே)

சொல்ல ஒன்றுமில்லை. கல்யாணம் ஆகிவிட்டது:-((
பிறகு துபாய்க்கு வந்தும், சைட்டடிக்க உரிமை மறுக்கப்பட்டவனாயே என் சோக வாழ்க்கையைத் தொடர்கிறேன்.
ஏன் என்போன்ற சிலருக்கு மட்டும் இந்தக்கதி? பொட்டி தட்டும் பொறியாளர்கள் இளமை கொப்புளிக்கும் பருவத்தில் உலகெங்கும் சைட்டடிக்க, உள்ளூரிலும் ஜொள்விடத் தடை செய்யப்பட்ட ஸ்பானர் பொறியாளர்கள் சார்பாகக் கேட்கிறேன்..
இந்த இழிநிலை மாற வ வா ச ஒரு மாபெரும் போராட்டம் அறிவிக்குமாயின் அப்போராட்டத்தின் வெற்றிக்காக நான் நீர்க்குளிக்கத் தயார்!

.... இங்கே பதியப்பட்டது சுரேஷ் (penathal Suresh) | 54 மறுமொழிகள் »