இது ஒரு வருத்தப்படாத வாலிபனின் வாழ்வில் நடந்த பல துன்பியல் சம்பவங்களின் தொகுப்பு.
சேரனோட ஆட்டோகிராப் பாத்ததுல இருந்து நமக்கும் அந்த மாதிரி நம்ம ஆட்டோகிராஃப மக்கள்ட கொண்டு போய் சேக்கனும்னு ஒரு ஆர்வம். ஆனா அப்ப அதுக்கு வழியில்லாம போச்சு. (நம்ம ஆட்டோகிராஃப்ல கோபிகா, ஸ்னேகா எல்லாம் எதிர்பாக்க கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்… அதுல வர ஒரு பொண்ணு 75 வயசான எங்க அப்பத்தாதான்
)
நான் ஏன் நாத்திகனானேன், நான் ஏன் மதம் மாறினேன் மாதிரி தலைப்பை பார்த்தவுடன், அது தூங்கிகிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடுச்சு. முதல்ல தோனது “நான் ஏன் இஞ்சினியர் ஆனேன்?”. ஆனா இத எங்க அப்பா பாத்தாருனா “ஏன்டா நாயே!!! நான் பணம் கட்டனேன் நீ இஞ்சினியர் ஆயிட்ட. இத பத்தி பெருமையா தொடர் வேற எழுதறயா?”னு பாஸ்டனுக்கு பஸ் பிடிச்சு வந்து அடிப்பாருனு அந்த தலைப்பை விட்டுட்டு “வருத்தப்படாத வாலிபனின் ஆட்டோகிராப்“னு எழுத ஆரம்பிச்சிட்டேன்…
சரி கதைக்கு போவோம்… சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னால்….
கள்ளக்குறிச்சில காட்டுத்தனமா படிச்சி எல்லா பரிட்சையிலும் 35 மார்க் மேல எடுத்து க்ளாஸ்லயே பெரிய ரேங் எடுத்து சிங்கம் மாதிரி சுத்திக்கிட்டு இருந்த என்னயத்தூக்கி கடலூர்ல ஹாஸ்டல்ல அடச்சி வெக்க எங்க அப்பா முடிவு பண்ணாரு.
எங்க அப்பத்தா அதெல்லாம் வேணாம்னு சொன்னப்ப எங்க அப்பா கேக்கல. கடலூர்ல அந்த ஸ்கூல்தான் பசங்களுக்கு ஒழுக்கமா வளர சொல்லி கொடுப்பாங்க. இவன் இங்க இருந்தானா பம்பரம், கோலி, கில்லினு விளையாடிகிட்டே உருப்புடாம போயிடுவான்னு எங்க அப்பா ஒரே முடிவுல இருந்தாரு.
சரின்னு அந்த ஸ்கூல்ல சேரதுக்கு எண்ட்ரஸ் பரிட்சை வெச்சாங்க. எப்பவும் பரிட்சைனா கில்லி மாதிரி பட்டைய கெளப்பிடுவேன். கடைசி மார்க்கா இருந்தாலும் வாத்தியார்ட சண்டை போட்டு, கெஞ்சி கூத்தாடி பாஸ் மார்க் வாங்கிடுவேன். ஆனா இந்த முறை நான் வாங்குன மார்க்கு எனக்கே ஆச்சரியமாயிடுச்சு. ஆனா எங்க அப்பா கொஞ்சம் ஃபீலிங்க இருந்தாரு. நம்ம புத்திசாலியா இருக்கறது அவருக்கு பொறாமையா இருக்குனு நானும் விட்டுட்டேன்.
பள்ளிகூடத்துல சேர்ந்து முதல் நாள் போகும் போது தான் தெரிஞ்சிது என்ன மறுபடியும் ஆறாம் க்ளாஸ்ல சேத்துருக்காங்கனு. ஏற்கனவே நான் எங்க ஊர்ல ஆறாவது ஒரு தடவ படிச்சு பாஸாயிட்டேன். இருந்தாலும் நம்மல சதி பண்ணி ஃபெயில் பண்ணிட்டாங்கனு அப்பதான் புரிஞ்சிது.
க்ளாஸ்ல முதல்ல நுழைஞ்சவுடனே எங்கப்பத்தா சொன்னது நியாபகம் வந்துச்சு. “கண்ணு முன்னாடி பென்ச்ல உக்காந்து படம் பாத்தா கண்ணு கெட்டுடும். அதனால எப்பவுமே கடைசிலதான் உக்காந்து பாக்கனும்”. சரினு கடைசி பென்ச்ல போயி உக்காந்துகிட்டேன்.
முதல் ஒரு வாரம் வாத்தியார் கேட்ட கேள்விக்கெல்லாம் ஃபர்ஸ்ட் பதில் சொன்னேன். வாத்தியாருக்கோ கள்ளக்குறிச்சில இருந்து வந்து கடைசி பெஞ்ச்ல உக்காந்தாலும் பையன் பயங்கர புத்திசாலினு ஒரு நம்பிக்கை வந்துச்சு.
ஒரு நாள் அவர்கிட்ட அடுத்த பாடத்தல இருந்து கேள்வி கேட்டேன்… அவருக்கா “நம்ம சொல்லி கொடுக்காதெதெல்லாம் தெரிஞ்சிவெச்சிருக்கான்… இவன் ரொம்ப புத்திசாலி”னு நெனச்சிகிட்டு “தம்பி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்”னு கேட்டாரு. நான் “போன வருஷமே படிச்சிட்டேன் சார்”னு அப்பாவியா சொன்னேன். அப்பதான் நம்ம வண்டவாளம் தண்டவாளாம் ஏறிடுச்சு.
(தொடரும்…)












